இலங்கை விவகாரத்தில் தலையிட கனடாவிற்கு தார்மீக உரிமை கிடையாது!

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்க கனடாவிற்கு தார்மீக உரிமை இல்லை, இலங்கையை காட்டிலும் பாரிய மனித உரிமை மீறல்கள் கனடாவில் இன்றும் இடம்பெறுகிறது. விடுதலை புலிகள் அமைப்பினரால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் ஏன் அவதானம் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கேள்வி எழுப்பினார்
    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உலகில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பை முடிவுக்கு கொண்டு வந்ததை எவ்வாறு குற்றச்செயலாக கருத முடியும்.

விடுதலை புலிகள் அமைப்பை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், பிரிவினைவாதிகள் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து வருகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ உட்பட இரு இராணுவ அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.

கனடாவில் வாழும் பிரிவினைவாத தமிழ்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டடுள்ளதே தவிர அந்த தடையில் எவ்வித உண்மையும் கிடையாது. யுத்தத்தை நிறைவுக் கொண்டு வந்த அரச தலைவர்கள், இராணுவத்தினர் அரசியல் நோக்கத்திற்காக தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் சிவில் யுத்தம் ஒன்றும் இடம்பெறவில்லை, மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் இடம்பெற்றது என்பதை சர்வதேசம் விளங்கிக் கொள்ள வேண்டும். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை இன அழிப்பு செயற்பாடு என்று சித்தரிப்பதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

விடுதலை புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள், கருவில் இருந்த சிசுவை கூட அழித்தார்கள் இதனை ஏன் சர்வதேசம் மனித உரிமை மீறல் குற்றமாக கருதவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சதி செய்கின்றனர்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் கனடா நாட்டில் நடைமுறையில் மனித உரிமை மீறல்கள், நிறவெறி செயற்பாடுகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஆகவே இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் கனடா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தமது அரசியல் தேவைகளுக்காக நல்லிணக்கம் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். இலங்கையின் உள்ளன விவகாரத்தில் தலையிட கனடாவிற்கு தார்மீக உரிமை கிடையாது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!