நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இதுவரை 158.7 பில்லியன் ரூபாவை மட்டுமே வரி வருமானமாக அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனைத் தெரிவித்துள்ளார்.  அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவினங்களுக்கு, ஜனவரி 27 ஆம் திகதி வரை 367.8 பில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 87.4 பில்லியன் ரூபாவும் ஓய்வூதியம், சமுர்த்தி மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு 29.5 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடன் சேவைக்கான ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய மாதாந்திரச் செலவு, அரசாங்கம் வருமானமாக ஈட்டும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, அரசாங்கம் திறைசேரி முறிகள், திறைசேரி உண்டியல்கள், மத்திய வங்கியிடமிருந்து தற்காலிக முற்பணங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து மேலதிக கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக நிதியை கோர வேண்டியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், பல நடவடிக்கைகளை முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரித் திருத்தங்களின் மூலம் வருமானம் ஈட்டத் திட்டமிடப்பட்டிருக்கும் வருமானங்கள் கிடைக்கும் வரை, அரசாங்க செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

திறைசேரியால் முன்னுரிமை அளவுகோல்கள் அமைக்கப்படும் எனவும் அதுவரை சிறு செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை விடுவிப்பது மட்டுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அதனை மீறும் எந்தவொரு அதிகாரியும் தனிப்பட்ட முறையில் செலவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!