கருக்கலைப்பு சட்டத்தால் அமெரிக்க தம்பதி படும் அவதி!

அமெரிக்காவில் புளோரிடாவின் புதிய கருக்கலைப்பு சட்டத்தால், பிறந்தவுடன் இறந்துவிடும் என்று தெரிந்தே குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் டெபோரா டோர்பர்ட் (Deborah Dorbert) மற்றும் அவரது கணவர் லீ டோர்பர்ட் (Lee Dorbert), தங்கள் குழந்தை Potter syndrome எனும் ஆபத்தான கரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.
    
அனால், உச்சநீதிமன்றத்தால் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட புளோரிடா சட்டத்தின் காரணமாக மருத்துவர்களால் இந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய முடியாது.

பாட்டர் சிண்ட்ரோம் (Potter syndrome) என்பது கருப்பையில் கருவின் வளர்ச்சியின் போது ஏற்படும் ஒரு அரிய சுகாதார நிலை. அசாதாரண சிறுநீரக வளர்ச்சி மற்றும் செயல்பாட்டின் காரணமாக கருவை பாதிக்கிறது, இது கர்ப்ப காலத்தில் அதைச் சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவத்தின் அளவை பாதிக்கிறது.

சிறுநீரகங்கள் செயலிழந்த குழந்தைகள் தங்கள் உடலில் இருந்து கொடிய நச்சுகளை அகற்றத் தவறுவதால், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் என்பதால், மருத்துவர்கள் இதை “இரட்டை மரண நோயறிதல்” என்று கருதுகின்றனர். மேலும், வயிற்றில் அம்னோடிக் திரவம் இல்லாததால் குழந்தை சுவாசிக்கும் திறன் இல்லாமல் பிறக்கும்.

இதுபோன்ற நோய்க்குறியுடன் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் பிறப்பதற்கு முன்பே இறந்துவிடுவார்கள் அல்லது பிரசவத்திற்குப் பிறகு சில மணிநேரங்கள் அல்லது நிமிடங்களில் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் இருக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் முன்கூட்டிய பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பத்தை நிறுத்த விரும்புகிறார்கள்.

ஆனால், புளோரிடாவில் கடந்த ஜூலை மாதம் அதிகாரிகள் அமல்படுத்திய கரு மற்றும் குழந்தை இறப்புக் குறைப்புச் சட்டத்தின்படி, கருவுற்ற 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காலம் கடந்துவிட்டதால், சுகாதார அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, கர்ப்பத்தை முறித்துக் கொள்ள தம்பதியினர் 37-வது வாரம் அல்லது கிட்டத்தட்ட முழு காலவரை காத்திருக்க வேண்டும் என்று நிபுணர் கூறினார்.

கருக்கலைப்புக்கு குறைவான கட்டுப்பாடுகள் உள்ள மற்ற மாநிலங்களுக்குச் செல்வது குறித்து தம்பதியினருக்கு நிபுணர்களின் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், அத்தகைய பயணச் செலவுகளை இந்த தம்பதியினரால் தாங்க முடியாது என கூறுகின்றனர். இந்த நிலையில், அவர்கள் குழந்தையை முறையாக பெற்றெடுத்த பிறகு அதன் மரணத்தையும், அதற்கு விடைகொடுக்கும் வேதனையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!