இந்திய கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல்! ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையர்கள், இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கி அவர்களின் கடற்தொழில் உபகரணங்களை எடுத்துச் சென்றதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகம் – நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், தோப்புத்துறை பகுதிக்கு கிழக்கே பெப்ரவரி 15ஆம் திகதியன்று கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூன்று விசைப்படகுகளில் வந்த சுமார் 10 இலங்கையர்கள், இந்திய மீன்பிடி படகை சுற்றிவளைத்து அப்பாவி கடற்தொழிலாளர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒருவருக்கு தலை மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டதுடன், மற்ற 5 பேருக்கும் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வோக்கி டோக்கி, ஜி.பி.எஸ் கருவி, மின்கலங்கள், சுமார் 200 கிலோகிராம் மீன் உள்ளிட்ட 2 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான பொருட்களை இலங்கையர்கள் எடுத்துச் சென்றதாக ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!