கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!

மாகாண சபையின் நிலைமை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஏற்படுவதை இடமளிக்க முடியாது. தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். வெற்றியோ, தோல்வியோ தேர்தலை நடத்த வேண்டும்.யாருக்கு அரசாங்கத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்,தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

அடுத்த வருடம் தேர்தல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த கருத்து கவலைக்குரியது. தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும், ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் மாத்திரம் தான் அந்த அதிகாரம் உண்டு.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது, சட்டத்திற்கு முரணாக தேர்தலை பிற்போட எவரேனும் முயற்சித்தால் கட்சி என்ற ரீதியில் முதலாவதாக நாங்கள் தான் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

முறையாக தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என்பதை குறிப்பிடுவதையிட்டு அச்சமடைய தேவையில்லை, அதுவே உண்மை. நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஒருபோதும் மறுக்கமாட்டோம் என்றார்.