தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு!

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
  
தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவதும் , அதனை விடுவிப்பதும் நிதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சரின் பொறுப்பாகும். எனினும் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய தேர்தலை நடத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதே போன்று நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலும் எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதே போன்று அரச அதிகாரிகள் தேர்தலை நடத்துவதில் தடையாக செயற்படுகின்றமை தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம்.

எவ்வாறேனும் மக்களின் வாக்குரிமையை பாதுகாத்து இறையான்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதற்காக உச்சபட்ச சட்ட நடவடிக்கையையும் எடுப்போம். நிதி அமைச்சினை தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் வழக்கு தாக்கல் செய்வோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!