கடற்தொழிலாளர்கள் வாழ்வில் எவரும் விளையாடக் கூடாது: ரணில் விக்ரமசிங்க

இந்திய கடற்தொழிலாளர்கள் அனுமதி பெற்று வடக்குக் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவது தொடர்பான விடயம் இதுவரை பரிசீலனையில் உள்ளதாகவும், இந்நிலையில் வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தாம் தீர்மானத்தை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வடக்கு கடற்பகுதியில் அனுமதி பெற்று இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்கலாம் என்று தெரிவித்த கருத்துக்கு வடக்கு கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்கின்றன. இதனால் இரண்டு நாடுகளின் நட்புறவில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எனவே, இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இரு நாட்டு கடற்தொழிலாளர்களினதும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வடக்கிலும், தமிழகத்திலும் பலர் அரசியல் ஆதாயமும் தேடுகின்றனர்.

கடற்தொழிலாளர்கள் வாழ்வில் எவரும் விளையாடக்கூடாது. நீங்கள் என்னிடம் கேட்ட விடயம் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவு எடுக்கும். அதனை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அந்தத் தீர்மானம் அமையும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!