மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது அரசாங்கம்!

நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும் அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவுக்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்துக்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கு ஆதரவு தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு எம்பிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத் தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!