இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைப்பு! வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய உள்நாட்டில் பால்மாவை உற்பத்தி செய்யும் மில்கோ மற்றும் பெலவத்த நிறுவனம் எந்த விலை குறைப்பையும் செய்யாது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது,உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பால் கையிருப்பு குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம் கிட்டத்தட்ட 12 லட்சம் லீட்டர் பாலை வழங்கி வந்த உள்ளூர் விவசாயிகள் தற்போது 5 லீட்டர் பால் மட்டுமே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு பால்மா விலையை குறைக்க முடியாது என மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டாலும், உள்நாட்டு பால்மா விலையை குறைக்க வேண்டிய அவசியமில்லை என பெலவத்த பால்மா உற்பத்தி நிறுவனமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினாலும், 400கிராம் பால்மா ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஆயிரத்து 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் விலை ஆயிரத்து 160 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை மூவாயிரத்து 100 ரூபாவிலிருந்து இரண்டாயிரத்து 900 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!