ரணில் மற்றும் மைத்திரி விரைவில் இணைவு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மனக்கசப்பு காணப்படும் நிலையில் அதையெல்லாம் மறந்து மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் இவர்கள் சில நாட்களுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்த விவகாரம் பற்றி விரிவாகப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின் விளைவாக ரணிலும் மைத்திரியும் நாடாளுமன்றில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதற்கான ஏற்பாட்டை அந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தச் சந்திப்பின்போது அரசில் இணைவதற்கான தனது விருப்பத்தை முன்னால் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார் என மைத்திரியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து இப்போதெல்லாம் மைத்திரி மீண்டும் சர்வகட்சி அரசாங்கத்தின் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.

ரணிலின் அரசாங்கத்துடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுத்ததும் அவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வெளிநாடு சென்றிருந்த தயாசிறி, சில தினங்களுக்கு முன்னர்தான் நாடு திரும்பியிருந்தார். அந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தித்தான் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றன. விரைவில் அரசுடன் மைத்திரி இணையும் செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!