ஞாயிறன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு!

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும், இந்துக்களின் அடையாளங்களை அழிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரத போராட்டம் மற்றும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்து போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    
எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து இந்த மாபெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழரின் மரபுரிமைகளை வென்றெடுக்க ஆன்மீகத் தலைவர்கள், ஆலய அறங்காவலர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்,சமுக மட்ட அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியவற்றின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்படும் இந்த எழுச்சி போராட்டத்தின் மூலம் தமிழர் மரபுரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்கள் திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!