இலங்கைக்கு தனது முதல் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவை அனுப்பியுள்ள சர்வதேச நிறுவனம்

சர்வதேச தனியார் கடன் வழங்குனர் குழு ஒன்று, 12 பில்லியன் டொலர்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன் பத்திரங்கள் தொடர்பாக, இலங்கை அதிகாரிகளுக்கு தனது முதல் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை ஒரு வருடத்திற்கு முன்னர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என தமது வங்குரோத்து நிலையை அறிவித்த பின்னர், இதுவே கடன் பத்திரகாரர்களின் முதல் முன்மொழிவு ஆகும்

விவாதங்கள் தனிப்பட்டவை என்பதால் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று தமக்கு தகவல் தந்தவர் கூறியதாக ரொயாட்டர் தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவு பற்றிய விபரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் பதிலளிக்கவில்லை.

அத்துடன் கடன் வழங்குநர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ரொயட்டர் கூறியுள்ளது.

இலங்கைக்கு தமது மறுசீரமைப்பு முன்மொழிவை அனுப்பிய சுமார் 30 கடன் வழங்குனர் குழுவில் உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களான அமுண்டி எசெட் மேனேஜ்மென்ட், பிளாக்ராக், HBK கெப்பிடல் மேனேஜ்மென்ட் மற்றும் T. ரோவ் பிரைஸ் அசோசியேட்ஸ் ஆகியவையும் அடங்குகின்றன.

முன்னதாக, இந்த வாரம் வோஷிங்டனில் பத்திரப்பதிவுதாரர்கள் மற்றும் இலங்கையின் அதிகாரிகள் சந்தித்தனர், இதன்போது இரு தரப்புக்கும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!