இலங்கை- பிரித்தானியா இடையே இன்று மூலோபாய கலந்துரையாடல்!


லண்டனில் உள்ள வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய இராச்சிய – இலங்கை மூலோபாய உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார்.
    
வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் ஐக்கிய இராச்சிய வெளியுறவு அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள இந்த உரையாடல், வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டனின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

இந்த ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ள முக்கிய தருணத்தில், வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் ஆரம்ப மூலோபாய உரையாடல் கூட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கானதொரு மன்றத்தை மூலோபாய உரையாடல் இரு தரப்புக்கும் வழங்கும். உரையாடலின் பக்க அம்சமாக, வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, பொதுநலவாய அமைப்பின் உதவிச் செயலாளர் நாயகம் பேராசிரியர் லூயிஸ் ஜி. பிரான்சிச்சியுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளதுடன், சர்வ கட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவார்.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!