தண்டனை கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை! மறைந்த ஊடகவியலாளரின் மனைவி

தனது கணவனைக் கடத்திக் காணாமல் ஆக்கியவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் வரையில் தான் ஓயப்போவதில்லை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். இன்று தொடக்கம் கணவனின் ஆத்மா தனக்கு முழுமையாகத் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட முன்னெடுத்து வந்த ‘கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் மன்றாடும் போராட்டம்’ நேற்றைய தினம் (18.04.2023) அக்கரைப்பற்றில் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவன் கடத்தப்பட்ட நிலையில் இறுதியாக அக்கரைப்பற்று பகுதியில் வைத்தே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தியா எக்னலியகொட தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டர்வகளின் உறவினர்கள் மற்றும் பெருமளவான பெண்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!