டயானா கமகேவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காது! நீதிபதி அறிவிப்பு

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என கொழும்பு பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து இன்று(24.04.2023) தனது முடிவை அறிவிக்கும் போதே நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதவான் மேலும் தெரிவிக்கையில்,“இராஜாங்க அமைச்சரை உரிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் தாம் உத்தரவு பிறப்பிப்பது தேவையற்றது.”என தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு டயானா கமகேவை கைது செய்ய கோரியது.

சட்டத்தரணிகள், நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் டயானா கமகேவை கைது செய்ய முன்வரவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் டயானா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றில் கோரியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!