விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பின் இலங்கையை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி! நாமல் ஆதங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி திட்டமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. எங்கள் வீழ்ச்சி திட்டமிடப்பட்ட ஒன்று. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நான் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், அவர் நல்ல அர்த்தமுள்ள முடிவுகளையும் எடுத்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நல்ல நோக்கத்துடனேயே எடுத்திருந்தார். ஒரு விவசாயியின் மகனாக, அவர் தனது முடிவுகளால் விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்சவின் கோவிட் தடுப்பூசி திட்டமானது இரண்டரை ஆண்டுகளாக நாடு மூடப்பட்ட பின்னர் நிலவிய கடினமான காலக்கட்டதில் எடுக்கப்பட்ட ஒன்றாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!