துணிவில்லாத இந்த அரசாங்கத்தால் நாடு மீண்டெழப்போகின்றது..! அநுரகுமார திஸாநாயக்க கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரின் சகாக்களும் தேர்தலுக்கு அஞ்சவில்லையெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்திக் காட்ட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பயப்படுகின்ற – துணிவில்லாத இந்த அரசாங்கத்தால் நாடு எப்படி மீண்டெழப்போகின்றது? வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக உரிமை. அதை எவராலும் தடுக்க முடியாது.

சாக்குப்போக்குக் காரணங்களைச் சொல்லி ஜனாதிபதியும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் சேர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
இதற்கு எதிராக அனைவரும் ஓரணியில் நின்று போராட வேண்டும்.

மக்கள் ஆணையை இழந்த இந்த அரசு, ஆட்சியில் தொடர்வது வெட்கக்கேடு. எனவே, முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!