நாட்டை மிரட்டும் 4,000 டெங்கு நோயாளர்கள்: பொதுமக்களை நெருங்கும் ஆபத்து

இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயால் பதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் (14.05.2023) வரை 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (15.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூறியுள்ளதாவது, நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நுளம்புகளின் இனப்பெருக்கம் மேலும் அதிகரிக்கிறது.

இந்த மாதத்தின் முதலாவது வாரத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 1,954 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இவர்களில் 51.7 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கம்பஹாவில் பதிவாகியுள்ளதுடன், குறித்த மாவட்டத்தில் 475 பேர் கண்டறியப்பட்டுள்ளதுடன், மேலும், கொழும்பில் 412 பேர் பதிவாகியுள்ளது.  இவ்வாறு நாடு முழுவதும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் பல அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகள், கொத்தட்டுவ, பிலியந்தலை, கடுவலை, மஹரகம, பத்தரமுல்லை, கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, நீர்கொழும்பு, பியகம, ராகம, ஜா-எல ஆகிய பகுதிகள் அதிக டெங்கு ஆபத்தான நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, தொற்று நோய் வைத்தியசாலை (IDH), கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில), லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, கண்டி தேசிய போதனா வைத்தியசாலை மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!