கோட்டாபய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட திட்டம் – ஜப்பானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரிய ரணில்

ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் மன்னிப்பை கோரியுள்ளார்.

டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை டோக்கியோவில் நடைபெற்ற மற்றுமொரு சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய நிதியமைச்சரை சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம், கோட்டாபய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!