இணையவழியில் கடவுச்சீட்டு வழங்கும் முறை இன்று ஆரம்பம்!

கடவுச்சீட்டுகளை இணையவழியில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுள்ளது. இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போன்று இயங்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 52 பிரதேச செயலகங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேவையான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று நாள் சேவை மற்றும் சாதாரண சேவைக்கமைய, கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சாதாரண சேவைக்கு 5000 ரூபாவும், மூன்று நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!