வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கை செப்டம்பர் 11 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றி வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.