சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்க வாய்ப்பு

சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு, சீனா போர்க்கப்பல் ஒன்றைக் கொடையாக வழங்கவுள்ளது என்று அண்மையில் கொழும்பில் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழாவில், சீன பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சீன ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங்,

” மேலும் ஒன்று அல்லது இரண்டு போர்க்கப்பல்களை சிறிலங்காவுக்கு சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிறிலங்காவுக்கு வழங்கப்படும் ஒரு போர்க்கப்பல் தெற்காசியாவில், தற்போதுள்ள பிராந்திய இராணுவச் சமநிலையை பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தாது.

இது பிரதானமாக கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!