தொல்பொருள் விவகாரத்தில் பிக்குகள் தலையிடுவதால் தான் பிரச்சினை!

தொல்பொருள் விவகாரத்தில் பௌத்த தேரர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும். அவர்களது செயற்பாடுகளினால் தான் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்த வீண் அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து பௌத்த தேரர்களிடம் பல சந்தர்ப்பங்களில் நேரடியாக தெரிவித்த போதும், அவர்கள் அதனை ஏற்கவில்லை என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

தொல்பொருள் எனக் கூறி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொல்பொருள் என்பது சட்டத்துக்குட்பட்ட விடயமாகும். தொல்பொருள் கட்டளை சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

அத்தோடு இந்த விவகாரத்தில் பௌத்த தேரர்களும், அரசியல்வாதிகளும் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும். சட்டத்துக்கமைய தொல்பொருள் திணைக்களத்துக்கு மாத்திரம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும்.

அதனை விடுத்து தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை முன்னெடுக்கும் பகுதிகளுக்குச் சென்று அங்கு சில பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக வீண் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இந்த விடயங்களில் தலையிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

இந்து ஆலயங்களை அழிப்பதற்கோ , தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கோ எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை வைத்து அரசியல் இலாபத்தை ஈட்ட பார்க்காமல் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!