பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது!

பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது பின்னடைந்துள்ளது. அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தாதமப்படுத்தல் மற்றும் அதற்கான காரணிகள் தொடர்பான பிரேரணையை ஏற்கிறோம். இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் படிநிலைகளுக்கு எமது கட்சி ஒத்துழைக்கும். நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் குற்றவியல் விடயங்களில் சம்பந்தப்பட்டோர் நீண்ட காலம் சிறைகளில் இருக்க வேண்டியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளோம். இந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் பின்னடைந்துள்ளது. இதனை அரசியல் விடயமாக பார்ப்பதே இதற்கு காரணமாகும்.

பயங்கரவாத தடைச்சட்டம் கொடுமையானது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். கைதிகள் பலர் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

சிலருக்கு எதிராக புதிய வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது அநீதியானது. இவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது மிகவும் அநீதியானது. கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து இந்த சட்டத்தில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!