சர்வகட்சி கூட்டத்துக்கு முன் மொட்டுடன் பேசி தீர்மானிக்க வேண்டும்!

அதிகாரப்பகிர்வு தொடர்பில் சர்வகட்சி கூட்டத்தை நடத்த முன் ஜனாதிபதி பொதுஜன பெரமுனவை ஒன்றிணைத்து ஒரு தீர்மானத்தை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
    
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது என நித்திரையில் இருந்து எழுந்ததை போல் கருத்துரைக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த அரசாங்கங்கள் ஏன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களின் அரசியல் பிரச்சினை,அதிகார பகிர்வு ஆகியவற்றை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்றுவித்தார்.அதனை கூட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நல்லாட்சி அரசாங்கம் பலவீனப்படுத்தி, மாகாண சபை வெள்ளை யானை போன்றது என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்தது.மாகாண சபை முறைமை நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.

13 ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் சர்வ கட்சி கூட்டத்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். சுதந்திர மக்கள் சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதிகார பகிர்வு விவகாரத்தில் ஏனைய அரசியல் கட்சிகயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையி;ல் ஈடுபட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் எத்தனையோ சர்வகட்சி கூட்டங்களை நடத்தி விட்டார். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. தமிழர்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக சர்வக்கட்சி என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை அவர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!