மற்றுமொரு பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம்!

இலங்கையில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்ற விதத்தினை பார்க்கின்றபோது மற்றுமொரு பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தோன்றுகின்றது என பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகர தெரிவித்துள்ளார்.
    
தரிந்து உடுவரகெதர மீதான தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் இல்லை கடந்த காலங்களில் நாட்டில் பத்திhகையாளர்களிற்கு எதிராக அநீதிகள் இவ்வாறே கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

தரிந்து உடுவரகெதர தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தரிந்து ஒரு விருதுபெற்ற பத்திரிகையாளர் இலங்கையின் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதினை கூட பெற்றவர் அவர் சிறந்த புலனாய்வு செய்தியாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கினார் என லக்ஸ்மன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவரது ஊடக பணிகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை ,கைது செய்தவேளை அவரை தாக்கியுள்ளனர் அவரது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு கடந்த நிலையில் வாழும் பத்திரிகையாளர் போத்தல ஜயந்த இவ்வாறே கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் சித்திரவதை செய்யப்பட்டார்,அவரது கைவிரல்களை முறித்தவர்கள் இந்த கையால்தானே நீ எழுதுவாய் என கேட்டனர் எனவும் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் அநீதிகள் இந்த வேகத்தில் இடம்பெற்றால் இன்னுமொரு பத்திரிகையாளரின் கொலையை பார்ப்பதற்கு நீண்டநாள் எடுக்காது எனவும் அவர் தெரிவித்தள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!