மின் கட்டணத்தை செலுத்த தயார்! கட்சியின் செயலாளருக்கு அறிவித்துள்ள நாமல்

மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார் என்று நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போராட்டத்துக்கு பின்னர் கட்சியை பலப்படுத்தியுள்ளோம். ராஜபக்சர்களின் அரசியல் பயணம் முடிவடைந்து விட்டது என்று ஒரு தரப்பினர் எதிர்பார்த்தார்கள். பாரிய போராட்டத்துக்கு பின்னர் பலமடைந்துள்ளோம். ராஜபக்சர்கள் மீது நாட்டு மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

திருமண விழாவுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செலுத்தவில்லை என்ற புதிய அரசியல் பிரசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது முன்னெடுத்துள்ளார்கள்.

இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் வினவினேன். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்,  ‘திருமண விழாவுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கு இதுவரை கட்டணம் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபை இதுவரை அறிவிக்கவில்லை. மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார்’ என குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்  மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்ற விவகாரம் தற்போது அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!