பொலிஸ் அதிகாரங்கள் குறித்து டிரான் அலசுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
    
பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதே முறைமையை இலங்கையிலும் அமுல்படுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாக கூறியுள்ளனர்.

இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் சமூக கலாசாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் போதைப்பொருள், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான தகவல்களை விசேட பொலிஸ் குழுவிற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!