குருந்தூர்மலையில் இன்று பொங்கல்! – அணி திரண்டு வருமாறு அழைப்பு.

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு இன்று அணி திரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார்.
    
குருந்தூர் மலையில் இன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். “வரலாற்று சிறப்பு மிக்க வன்னி பெருநிலபரப்பிலே தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பிரமாண்டமான முறையிலே இடம்பெறவுள்ளது.

கடந்த சில காலங்களாக முரண்பாடுகள் காரணமாக பொங்கல் நிகழ்வை குழப்பியிருந்தார்கள். இருப்பினும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வினை எவ்வித இடையூறும் இல்லாது நடாத்துவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

இந்த தீர்ப்பின் அடிப்படையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் இருப்பையும் தொன்மையையும் பாரம்பரிய வழிபாட்டு முறையான பொங்கல் நிகழ்வினை நடாத்துவதற்கு ஆலய பரிபாலனசபையினர் தீர்மானித்திருக்கின்றனர்.

எனவே, தாயக பிரதேசத்திலே வாழுகின்ற அனைத்து தமிழ் உறவுகளும் அதாவது வன்னி பெருநிலப்பரப்புக்கு அப்பால் வடக்கு, கிழக்கிற்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும் தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் அனைவரையும் வருகைதருமாறும் அழைத்து நிற்கின்றோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!