முல்லைத்தீவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து திரட்டும் போராட்டம்

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று(21.08.2023)புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முத்துகுமாரசாமி லக்சயன் தலைமையில் இந்த கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், “நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வழி வகுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மாற்றி மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணுங்கள்”எனக் கூறி சபாநாயகரிடம் கொடுக்கவுள்ள மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டில் பொதுமக்களுக்கு சுகாதார சேவையில் ஏற்படும் பாதிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் அங்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களிடமிருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசுதர்சன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!