குற்றவாளி எம்.பிக்களை பதவி நீக்க அரசியலமைப்பில் திருத்தம்!

குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அவர்கள் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டாலும் அவர்களை நீக்குவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை. அதனால் குற்றம் நிரூபிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்க முடியுமான வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
    
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சிறப்புரிமைகளை பயள்படுத்திக்கொண்டு, வெளிநாட்டில் இருந்து சட்ட விராேதமான முறையில் தங்கம் கொண்டுவந்தை தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜந்த முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு நீதிபதிகள் அழைக்கப்படுகின்றனர். அதேபோன்று தங்கம் கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினரை இந்த குழுவுக்கு அழைக்கப்படுகிறார், இது நல்ல விடயமல்ல.

சிறப்புரிமை குழுவினால் அலிசப்ரி எம்.பிக்கு எதிராக அவர் குற்றம் செய்திருக்கிறார் என அறிக்கை ஒன்றை விடுத்தாலும் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதும் நான் தெரிவித்திருந்திருந்தேன்.
அதனால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஊழல் மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற பதவியில் இருந்து நீக்கும் சோல்பரி யாப்பில் இருக்கும் உறுப்புரிமையை, அரசிலயமைப்பு திருத்தம் ஊடாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பிரேரணை ஒன்றை முன்வைக்கிறேன்.

1956இல் இவ்வாறு ஊழல் மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் 4பேர் பாராளுமன்றத்தில் இருந்து பதவி நீக்கப்பட்டதும் இந்த உறுப்புரியை அடிப்படையிலாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதாக இருந்தால் இதனையே செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவிக்கையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவர தீர்மானித்தோம். இதனை அவ்வாறே மேற்கொள்வதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீங்கள் முன்வைத்த பிரேரணை தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!