சிறிமாவோவுக்கு பிறகு உலகையே வென்ற ஒரே ஜனாதிபதி நானே! மைத்திரி பெருமிதம்

மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றில் நேற்று (28.08.2023) இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற ஒரே ஜனாதிபதி நானே. இன்று தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அரசு ஊழியர் மகிழ்ச்சியாக இல்லை, கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இல்லை, சாதாரண குடிமகன் மகிழ்ச்சியாக இல்லை. பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

இவற்றைத் தடுப்பதற்கும் மற்றும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் காண்கிறோம். நாம் அதை செய்ய முடியும். கட்சி என்ற வகையில் அதற்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன.

ஜனாதிபதியாக பணியாற்றியவர் என்ற வகையில், அந்த அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு, எனது நல்லாட்சியின் காலம் முழு உலகையும் நான் வென்ற காலம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் செயற்படும் தகுதி 8ஆவது ஜனாதிபதிக்கும் இல்லை. இதை 7 ஜனாதிபதிகள் செய்யவில்லை என்று கூறினீர்கள். இம்முறையும் அதைத்தான் செய்கிறார்கள். அது நடக்காது என்றுதான் நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!