ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் முரண்பாடில்லை…

“கிராம எழுச்சி” வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் 200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வேலைத்திட்டங்களை கண்காணிப்பு எம்.பி.கள் மூலம் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனவே அது குறித்தும் அவ்வுறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பிலும் அடுத்தவார அமைச்சரவை அமர்வில் தீர்மானிக்கப்படவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கண்காணிப்பு எம்.பிக்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை அமர்வின்போது, பிரதமரினால் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அது சம்பந்தமாக நேற்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்பபடவில்லை. ஆகவே அவ்விவகாரம் தொடர்பில் அடுத்தவார அமைச்சரவை அமர்வின்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

இருந்தபோதிலும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை அமர்வின்போது பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் நிகாகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனையொட்டி ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்பாடு வலுவடைந்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்குமாயின் அதில் யதார்த்தம் இல்லை.

எனவே கண்காணிப்பு எம்.பிக்கள் குறித்து அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்படவுமில்லை. மாறாக அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. ஆகவே அதில் உள்ளடகப்பட்டுள்ள எம்.பி.களின் சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கபடும்.

“கம்பெரலிய”திட்டத்தினூடாக பிரதேசங்கள் பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. அவ் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மேலதிக அதிகாரிகள் நியமிக்க முடியாது. ஆகவேதான் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக அப்பணிகளை எம்.பி.களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த சிபாரிசை உயர் அதிகாரிகள் குழுவே முன்வைத்துள்ளது. அதனையை அடிப்படையாகக்கொண்டே குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்துது. பிரதமர் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், பாராளுமன்ற விவகார செயலாளர் உள்ளிட்டோரே அக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

“கம்பெரலிய” திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் 200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்நிதி மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். மேலும் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் குறித்த பணிகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.

ஆகவே அப்பணிகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் அதிகாரிகளைக்கொண்டு அவ்வேலைத்திட்டங்களை பூரணப்படுத்துவது சிரமமான விடயமாகும். எனவேதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பில் அவ்வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!