பிரார்த்தனையில் இடையூறு- 9 வயது சிறுவனை அடித்து கொன்ற புத்த பிட்சு

தாய்லாந்து பாங்காங் அருகே பிரார்த்தனையில் இடையூறு செய்ததாக 9 வயது சிறுவனை புத்த பிட்சு அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பாங்காங் அருகே காஞ்சனாபுரியில் புத்தபிட்சு மடம் உள்ளது. இங்கு இளம் புத்தபிட்சுகள் பயிற்சி மையம் உள்ளது.

நேற்று இங்கு வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்தது. சுபாசை சுதியானோ (64) என்ற புத்த பிட்சு பிரார்த்தனை நடத்தினார்.

அப்போது அங்கு பயிற்சி பெற்று வந்த 9 வயது புத்த பிட்சு சிறுவன் வட்டானா போல் சிசாவத் இடையே விளையாடிக் கொண்டு குறும்பு செய்தான். இது பிரார்த்தனைக்கு இடையூறாக இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த புத்தபிட்சு சுபாசை சுதியானோ பிரார்த்தனை முடிந்ததும் சிறுவன் வாட்டானா போலை அழைத்து மூங்கில் குச்சியால் சரமாரியாக அடித்து உதைத்தார்.

அதன் பின்னரும் அவரது கோபம் தீரவில்லை. சிறுவனை முதுகில் பல முறை எட்டி உதைத்தார். அங்கிருந்த தூணில் தலையை மோதவைத்தார். அதனால் ‘கோமா’ நிலைக்கு சென்ற அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

தாய்லாந்தில் புத்தமதத்தினர் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள புத்த பிட்சுகளில் பெரும்பாலானோர் செக்ஸ், போதை பொருள் விவகாரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!