வடக்கில் இந்தியர்கள் குடியேற்றப்படுகிறார்களாம்! – கனவு காணும் விமல் வீரவன்ச

வடக்கு மாகாணத்தில், இந்தியர்கள் குடியேற்றப்படுவதாக, விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்திருக்கும் கருத்தை முழுமையாக மறுத்துள்ள அரசாங்கம், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த நிலையில், தற்போது நாடு திரும்பும் இலங்கையர்களே, வடக்கில் குடியேற்றப்படுகிறார்கள் எனவும் விளக்கமளித்துள்ளது.

போலியான கருத்துகளை பரப்புவதற்கு முன்னர், வீரவன்ச எம்.பி, அவை தொடர்பிலான தகவல்களை அரசாங்கத்திடம் கேட்டால், புள்ளிவிவரங்களுடன் தந்துதவ முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ள அரசாங்கம், விமலுக்கு இந்திய ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்துரைக்கும் போதே, அக்கட்சியின் உப- தலைவரும், அமைச்சருமான மஹிந்த சரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 24ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கடந்த ஒருவருடத்தில் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில், உரையாற்ற உள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெறவுள்ள சர்வதேச ​போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்விலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கலந்துகொள்ள உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடற்படையின் முன்னாள் தளபதியும் பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவர் நாட்டை விட்டு தப்பியோடவில்லை எனவும், 16ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மெக்ஸிகோவின் தேசிய தினத்தில் இலங்கை சார்பில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் மெக்ஸிகோ சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!