பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்?


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் சந்தேகிக்கின்றோம் என்று இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகர் ஆர்யா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா தற்போது நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒவ்வொரு பெண்களின் வீட்டுக்கும் நேரடியாக சென்று வருகின்றார்.

அவர் இலங்கை பெண் சுசானாவின் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்குச் வருகை தந்த போது, அவரது உறவினர் வீட்டுக்கு முதலில் ஆர்யா சென்றார்.

அங்கு உறவினர் ஒருவர் இலங்கையில் போர் சமயத்தில் நடந்த கொடூரச் சம்பவங்கள் பற்றி கூறினார். இதன் போது விடுதலைப் புலிகளின் ஆரம்ப நிலை குறித்தும் தெரிவித்தார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எப்போது வேண்டுமானாலும் ஷெல் தாக்குதல் நடக்கும், இறந்தவர்களின் உடல்களை எரிக்க கூட நேரம் இருக்காது. அனைத்து பிணங்களையும் வண்டியில் கொண்டு போய் மொத்தமாக வைத்து எரிப்போம். சில சமயம் எரிக்க மரம் இருக்காது, அப்போது பெரிய கிடங்கு வெட்டி 30 பேரை மொத்தமாக புதைத்து விட்டோம். விடுதலைப் புலிகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் பிரபாகரன் ஆரம்பநிலை போராளியாக இணைந்திருந்திருந்தார். இதன் போது எங்களின் வீட்டுக்கு இரு முறை வந்து சென்றார். எனினும் அடுத்து வரும் காலங்களில் ஏற்பட்ட தாக்குதலில் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தான் சாகவில்லை, உயிருடன் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக பிரபாகரன் அறிவித்தார். அன்றைய காலப்பகுதியில் பிரபாகரனைப் பார்க்கச் சென்ற போது அவர் உண்மையானவரா அல்லது போலியானவரா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், எமது வீட்டுக்குப் பிரபாகரன் வரும் போது நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்டார்” என்று சுசானாவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.