தவறுதலாக சுட்டுவிட்டோம் ; சிரியா ராணுவம்

காணாமல் போன ரஷிய போர் விமானத்தை சிரியா ராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.

இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த திங்கட் கிழமை இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணித்த போது திடீரென ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல் போனது. எனவே, இஸ்ரேல் ராணுவத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

இந்நிலையில், ரஷிய விமானத்தை தவறுதலாக சிரிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு இஸ்ரேல் விமானிகள் ரஷிய விமானங்களை கேடயமாக பயன்படுத்தி வந்துள்ளனர். விமானம் வீழ்த்தப்பட்ட லடாக்கியா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அச்சமயம் அந்த பகுதி வழியாக வந்த ரஷிய விமானம் சிரியா ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷியா பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளதாவது, ‘தாக்குதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததால் ரஷிய விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. இஸ்ரேலிய விமானங்கள் பொறுப்பற்ற செயல்களால் வேண்டுமென்றே அந்த பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ரஷிய ஜனாதிபதி புதினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 15 வீரர்களின் உடல்களை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!