பிரித்தானிய சாலிஸ்பரி பிராந்தியத்திலுள்ள உணவகமொன்றில் உணவருந்திக் கொண்டிருந்த வேளை சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய மொடல் அழகியொருவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே தன்னை எலி நஞ்சின் மூலம் கொல்ல முயற்சித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அன்னா ஷப்பிரோ (30 வயது) என்ற மேற்படி மொடல் அழகியும் அவரது கணவர் அலெக்ஸ் கிங்கும் (42 வயது) கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகமொன்றில் உணவருந்திக்கொண்டிருந்த வேளை கடும் சுகவீனமடைந்தனர்.
இதன்போது அலெக்ஸ் கிங் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மேற்படி ஜோடியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர்கள் மீது எலி நஞ்சைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விளாடிமிர் புட்டினே தம்மை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியதாக அன்னா ஷப்பிரோ குற்றஞ்சாட்டுகிறார்.
இந்த சம்பவத்தையடுத்து சாலிஸ்பரி பிராந்திய வீதிகள் மூடப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. ரஷ்யாவில் பிறந்த அன்னா ஷப்பிரோ, 2008 ஆம் ஆண்டில் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக இஸ்ரேலிய பிரஜையாக மாறினார்.
2008 ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்ற அவர், அலெக்ஸ் கிங்கை சந்தித்துக் காதல் கொண்டார். அதன் பின்னர் அவர்கள் கடந்த மாதமே திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இந்நிலையில் ரஷ்ய புலனாய்வுப் பிரிவானது தன்னை ஒரு உளவாளியாகக் கருதி வருவதாக அன்னா ஷப்பிரோ கூறுகிறார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!