தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு

மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.

58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த தில்லுமுல்லுவினால் முஹம்மது சோலி 58.4 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவித்த தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக யாமீன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.