முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஒன்றிணையுமாறு அழைப்பு!

முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவுடன் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவினர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

சர்வதேச போரியல் விதிமுறைகளில் விதத்துரைக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் போர்முறைகள் பயன்படுத்தப்பட்டு குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என்ற வேறுபாடுகள் கடந்து தமிழினம் பதைபதைக்க துடிதுடிக்க மிகக் கொடூரமாக கொன்று ஒழிக்கப்பட்டு தசாப்தம் ஒன்று நிறைவடைந்துள்ளமையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நாள் அறைகூவல்

பாதுகாப்பு வலயம் என அரசினால் பகிரங்க அறிவிப்பு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலான பிரதேசத்தினுள் தமிழினம் உள்ளீர்க்கப்பட்டு கொத்துக்குண்டுகள் மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்த முடியாது.

இன்று வரைக்கும் கூட இந்த இன அழிப்பு நடவடிக்கைகள் வடிவமாற்றம் தொல்லியல் திணைக்களம் வனபரிபால திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பனவற்றினூடே தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த வாழ்நிலங்களை வன்பறிப்புச் செய்வதும் தமிழினத்தின் தொன்மை பொருந்திய வரலாற்று சின்னங்களையும், மரபுரிமை ஆதாரங்களையும் அழிப்பதும் திரிபடையச் செய்வதுமாய் தொடர்கின்றது.

எம்மால் மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளினால் இவைதொடர்பில் போதுமான முன்னெடுப்புக்கள் செயற்படுத்தப்படவில்லை என்பது வேதனை தரும் விடயம்.

எனவே எமது இனம் துடிதுடிக்க அழிக்கப்பட்ட இந்த தசாப்தத்தின் நிறைவை எந்தவித அரசியல் தலையீடுகளும் முனைப்புக்களும், மேடைப்பேச்சுக்களும் இன்றி அமைதியான சூழலில் எம் உறவுகளை நினைந்து அவர்கள் இறுதியாக வாழ்ந்து மரணிக்க செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று வேற்றுமைகளை கடந்து நாம் கண்ணீர் விட்டு அழ எங்கள் இதயத்தின் ஆறாத காயங்களை சிறிது கழுவிக்கொள்ள இதனூடே சர்வதேசத்திற்கும் இந்த இன அழிப்பு தொடர்பான உண்மையை உணர்த்த முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இறந்து போன உறவுகளின் உறவுகள், சமயத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவை அமைத்துள்ளோம்.

எந்தவொரு கட்சி பின்னணியும் அற்ற குறுகிய நோக்கங்களை கடந்த இந்த அமைப்புடன் இணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலை செவ்வனே நடாத்தி முடிக்க ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும் இந்த நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு தளங்களில் நிதி சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கவும், அறிந்து கொள்ளவும் முடிகின்றது. இந்த நிகழ்வு தொடர்பான நிதி நடவடிக்கைகளை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவே மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!