நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் மாத்திரமே பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தவரான சுமந்திரன் இந்து ஆலயம் குறித்து அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பினார்.
இராஜகிரியவில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தற்போது தனி அரசாங்கமே காணப்படுகிறது. பிரிவினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கில்லை . தனி நாடு பற்றி பேசி சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .
குருகந்த விகாராதிபதியின் இறுதி கிரியைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளே குழப்பியடித்தனர். அங்கிருந்த தமிழ் சகோதர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. குருகந்த தேரர் பொதுமக்களுக்கு சேவை செய்தவர். புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தார். சுமார் 11 வருட காலம் குறுகந்த பகுதி மக்களுக்காகவே அவர் சேவை செய்து வந்தாரே தவிர தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை.
வடக்கில் வேறொரு அரசாங்கமே இருக்கிறது. இந்த அரசாங்கத்தின் குதர்க்கமான ஆட்சியின் காரணமாகவே சிங்கள பௌத்தர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லாமல் போகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பாராளுமன்றத்தில் தாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்து விட்டு அநுராதபுரத்துக்கு அப்பால் சென்றவுடன் தனி நாடு பற்றி பேசுவது எந்த வகையில் நியாயமாகும்? எங்களுக்கு அமுல்படுத்தப்படும் சட்டம் பிரிவினைவாதிகளுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை. சட்டத்தை அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
காலஞ்சென்ற பௌத்த பிக்குவின் இறுதி சடங்கிற்கு செய்ய வேண்டியதை நாங்கள் பௌத்தர்கள் என்ற ரீதியில் செய்து விட்டோம். கூட்டமைப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர். அதனை நாங்கள் நீதி மன்றத்தில் சந்திக்க தயார். குருகந்த தேரரின் உடல் மூன்று நாட்களுக்கு வைத்திருக்கும் வகையில்லேயே பதப்படுத்தப்பட்டிருந்தது. நீதி மன்ற தீர்ப்பு வருவதற்கு தமதமாகும் என்ற நிலையிலேயே மனிதாபிமான ரீதியில் அவரின் இறுதி கிரியைகளை மேற்கொண்டோம். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்து 200 க்கும் அதிக பௌத்த பிக்குகள் முல்லைதீவுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக நான் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றேன். பல தடவைகள் சிறை சென்றுள்ளேன். இதற்காக ஒருபோதும் பயப்படப் போவதில்லை. இந்த அரசாங்கம் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்திக் கொண்டு வெட்கித் தலைகுனியக் கூடிய வகையில் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திற்குள் இன்னொரு அரசாங்கம் இருக்கிறது. பிரிவினைவாதிகள் அவர்களின் நடவடிக்கையைத் தொடர்கின்றனர். அவர்களுக்கு எதிராக பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வடக்கு கிழக்கில் பிரிவினைவாதிகள் கடந்த சில வருடங்களில் வேறூன்றி விட்டார்கள். இங்கு குண்டாந்தடியால் மக்களை தாக்கலாம். அங்கு வேறொரு அரசாங்கம் செயற்படுவதால் இந்த குண்டாந்தடி பிரயோகம் சரிவராது. இந்த பிரிவினைவாத்தை தடுக்காவிட்டால் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படும். இதனால் தமிழ் , சிங்கள மக்களே பாதிக்கப்படுவார்கள்.
தமிழ் மக்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் மாத்திரமே பிரச்சினை இருக்கிறது. சுமந்திரன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராவார். எனவே இந்து ஆலயம் குறித்து அவர் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன? எமக்கெதிராக கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடியமை தவறானதொரு தீர்மானமாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!