ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட இரவில் நேஷன் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் லலித் அழகக்கோன், உரிமையாளர் கிரிஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்புகொண்டனர். கீத் நொயார் கடத்தப்பட்டுள்ள தாகவும் அவரை எப்படியேனும் மீட்டுத்தருமாறும் அவர்கள் என்னிடம் கோரினர்.
அதனையடுத்து நான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைத்தேன். அவரிடம், கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளார். நிச்சயம் இது திட்டமிட்ட நடவடிக்கை. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதால் அரசாங்கத்தில் இருக்க வெட்கப்படுகின்றேன்.
கீத் நொயாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பதவியை துறந்து, பிராயச்சித்தமாக காரணத்தை அறிவித்துவிட்டு அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் அவசரப் பட வேண்டாம், கீத் நொயாருக்கு எதுவும் ஆகாது என கூறினார்.
அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரிய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் ஓர் அங்கமாக கடந்த 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பெற்றுக்கொண்ட வாக்கு மூலத்தினை நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்கு சமர்பித்தது.
இதன்போதே சபாநாயகரின் மேற்படி வாக்கு மூலத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ்.திசேரா, விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோருடன் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம திறந்த மன்றில் நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவை அழைத்ததாகவும், கோத்தபாய முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, உளவுத் துறை பிரதானி ஹெந்த விதாரனவை அழைத்துள்ளதாகவும், ஹெந்த வித்தாரன இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி, இவ்விவகாரத்தில் 8 ஆம் சந்தேக நபரான அமல் கருணாசேகரவை அழைத்துள்ளதாகவும், அமல் கருணாசேகர முதல் சந்தேக நபரான மேஜர் புளத்வத்தவுக்கு அழைப்பை ஏற்படுத்தியே கீத் நொயார் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
நேற்றைய தினம் கீத் நொயார் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது ஏற்கனவே கைதாகி பிணையில் உள்ள இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்ளியூ.புளத்வத்த, எஸ்.ஏ.ஹேமசந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜயசூரிய ஆகியோருக்கு மன்றில் ஆஜராக வேறு திகதி கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆஜராகவில்லை.
எனினும் 8 ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவ தளபதி அமல் கருணாசேகர சிறைச்சாலை அம்பியூலன்ஸ் வண்டியில் மன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
அம்பியூலன்ஸ் வண்டியிலிருந்து அவர் சக்கர நாற்காலியிலேயே கல்கிசை மேலதிக நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார். இந் நிலையிலேயே வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோருடன் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உதார கருணாதிலக ஆஜரானார். வழமையாக ஆஜராகும் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம சுகயீனம் காரணமாக நேற்று மன்றில் ஆஜராகவில்லை.
8 ஆம் சந்தேக நபரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நலின் இந்திரதிஸ்ஸ தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.
இந் நிலையில் மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையை விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா கையளிக்க, கருத்துக்களை முன்வைத்த சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம தெரிவித்ததாவது,
கடந்த தவணையில் இந்த சம்பவத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தொடர்பு குறித்து விசாரணைகளில் அவதானம் செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சரத் பொன்சேகாவின் தொடர்பு குறித்து நாம் 8 ஆவது சந்தேக நபரான அமல் கருணாசேகரவிடம் சிறையில் வைத்து விசாரித்து வாக்கு மூலம் பெற்றோம்.
அதில் சரத் பொன்சேகா கீத் நொயார் விவகாரம் தொடர்பில் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என சந்தேக நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந் நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளீட்டோரின் கையடக்க, ஏனைய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் 2008.05.20 முதல் 2008.05.23 வரையான காலப்பகுதிக்குரிய தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்திய பகுப்பாய்வு, கோபுர தகவல்களும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதன்போதும் சரத் பொன்சேகாவுக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புகள் இருப்பது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை.
இந் நிலையில் நாம் இந்த விவகாரம் தொடர்பில் சுயேட்சையாக வாக்கு மூலம் வழங்கிய சபாநாயகர் கரு ஜயசூரியவின் வாக்கு மூலத்தையும் பதிவு செய்தோம். அதில் அவர், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட இரவில் நேஷன் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் லலித் அழககோன், உரிமையாளர் கிரிஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்புகொண்டனர்.
கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை எப்படியேனும் மீட்டுத்தருமாறும் அவர்கள் என்னிடம் கோரினர். அதனையடுத்து நான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைத்தேன்.
அவரிடம், கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளார். நிச்சயம் இது திட்டமிட்ட நடவடிக்கை. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்க வெட்கப்படுகின்றேன்.
கீத் நொயாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பதவியை துறந்து, பிராயச்சித்தமாக காரணத்தை அறிவித்துவிட்டு அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுவேன். எனக் கூறினேன். என தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கு மூலங்கள், தொலைபேசி அழைப்புக்கள் குறித்த பகுப்பாய்வு நடவடிக்கைகள், சம்பவத்தை நேரில் பார்த்த லான்ஸ் கோப்ரலின் வாக்கு மூலங்களை ஒப்பீடு செய்து நோக்கும் போது இந்த குற்றம் தொடர்பிலான சந்தேக நபர்களின் செயற்பாடு தொடர்பில் தெளிவாகிறது.
இந் நிலையில் தீர்க்கமான இந்த விசாரணைகளை முன்னெடுத்து செல்ல சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோருகின்றோம். என்றார்.
எனினும் சந்தேக நபரான அமல் கருணாசேகரவின் சட்டத்தரணிகள் அமல் கருணாசேகரவுக்கு இந்த குற்றத்துடன் தொடர்பு இல்லை எனக் கூறி பிணை கோரினர். தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட போதும், அதில் கீத் நொயார் தொடர்பில் பேசப்படவில்லை எனவும் அதன் உள்ளடக்கம் தெரியாது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் அமல் கருணாசேகரவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!