நைஜீரியாவில் பயங்கரம்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 30 பேர் பலி!

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாதிகள் அங்குள்ள கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்து, கொடூர தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் ஒரே சமயத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தினர். இதில் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை கதுனா மாகாணத்தில் உள்ள பகாலி என்ற கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேரை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றது நினைவுகூரத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!