நத்தார் கொண்டாட்டங்களை தவிருங்க – யாழ் மக்களுக்கு கோரிக்கை!

யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு இவ்வருட நத்தாரை கொண்டாட வேண்டும் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“யாழ் மாவட்டத்தில் தற்பொழுது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்படுகின்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலமாகவுள்ளது.

அதிலும் குறிப்பாக எதிர்வரும் நாட்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் வருகின்றன. பொதுமக்கள் நாட்டில் உள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி தங்களுடைய கொண்டாட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது வீடுகளிலேயே குறித்த கொண்டாட்டங்களை கொண்டாடுங்கள் வெளியே செல்ல முயற்சிக்காதீர்கள். நத்தார் புதுவருட கொண்டாட்டங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களமும் சிலசுகாதார நடைமுறைகளை அறிவித்துள்ளது.

அத்தோடு தேவாலயங்களில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் ஆலய பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்து பொதுமக்களும் பின்பற்றி செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுதலை தவிர்க்கவேண்டும். கடந்த வருட கொண்டாட்டங்களை போலல்லாது இம்முறை தற்போது உள்ள கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ்வருட நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை செயற்படுத்துங்கள்.

ஏனெனில் தற்போது யாழ் மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவியநிலை காணப்படுகின்றது. அதனை மேலும் பரவாது தடுப்பதற்கு நாம் அனைவரும் சுகாதாரப் பகுதியினருக்கு ஒத்துழைத்து செயற்பட வேண்டும். தற்போதைய நிலையில் பொதுமக்கள் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை அமைதியான முறையில் முன்னர் கொண்டாடியதை போலல்லாது சாதாரணமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!