தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார்.

“இச்சட்டம், ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி ஆகியோருக்கு மாத்திரம் விதிவிலக்கானது அல்ல” என்றார். நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெறும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உலக சுகாதார தாபனம் பரிந்துரைத்துள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்களை முறையாக பின்பற்றினால் வைரஸ் தொற்றில் இருந்து மீளலாம் எனத் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கொவிட் விடயத்தில் சுயநலமாக எவரும் செயற்பட முடியாது.

“ நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரது பொருப்பற்ற செயற்பாட்டின் காரணமாக மீண்டும் நெருக்கடியான சூழ்நிலைக்கு செல்ல முடியாது” என்றார்.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் நிறைவு பெறும் என தெரிவித்த அவர், நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலும், சமூகஞ்சார் ரீதியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு போராட்டத்தில் ஈடுப்படும் தருணம் இதுவல்ல, ஆகவே? போராட்டங்களில் ஈடுபடுவதை சிவில் தரப்பினரும், தொழிற்சங்கத்தினரும் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!