தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார் ; எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருப்பார் என்பதை வரலாறு சுட்டிக் காட்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையில் யுத்தம் வேண்டாம் என்று கூறியிருக்கின்றார். யுத்தத்திற்கான காரணியான தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான ஆணிவேர்கள் எது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் தேசிய நல்லிணக்கம் ஏற்படாது என்பதை ஜனாதிபதி தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லை எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார் இந்த உரை நியூயோர்க் நகரில் இருந்து இலங்கையின் சிங்கள மக்களுக்கான, சிங்கள வாக்காளர்களுக்கான உரையாகவே பார்க்கப்பட முடியும் அப்படி என்றால் தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா? அவ்வாறு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும் ஐக்கிய நாடுகள் சகையின் ஆதரவை நாமே கோருவது தவறல்ல என்பது ஜனாதிபதி உரை மூலம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு மீள் கட்டுமானம் நஷ்டஈடு பொறுப்புக்கூறல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பவற்றை வசதிக்காக மறந்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம்திகதி பதவி யேற்றத்தின் பின்னரே 2015 ஆம் ஆண்டு செப்ட ம்பர் மாத கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு போர்க்குற்றங்களுக்காகவும் ஏனைய குற்றங்களுக்குமான விசாரணையை இலங்கை அரசே வெளிநாட்டு நீதிபதி பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் உட்பட வழக்குத் தொடுநர்கள் விசாணையை நடாத்துவதற்கு 30/1 தீர்மானம் மூலம் ஏற்றுக்கொண்டு 3ஆண்டுகள் கடந்தும் செயற்படுத்த மாட்டோம் என ஜனாதிபதி, பிரதர், சிரேஷ்ட அமைச்சர்கள் பகிரங்கமாக இலங்கையில் தெரிவிக்கிறார்கள்.

ஜனாதிபதி துணிச்சல் , முதுகெலும்பு இருந்திருந்தால் ஐக்கியநாடுகள் பொது சபையில் உரையாற்றியபோது போர்க் குற்றங்களை நாங்கள் விசாரிக்க மாட்டோம் என்று கூறியிருக்கவேண்டும்.

மேலும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கான விசாரணைகளை ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை தமது வேண்டுகோளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பிவைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பிற்கு பார்வைப்படுத்தப்படவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் சார்பில் எமது நிலைப்பாடாகும் இந்த நிலைப்பாட்டின் நியாயத்தன்மையை சர்வதேசம் புரிந்துகொள்ளும் என நம்புகின்றோம்.

அரசில் தீர்வைப் பற்றியும் எதுவும் குறிப்பிடாத ஜனாதிபதியின் மௌனம் பற்றி எம்மை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதாவது இலங்கைக்குள் அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை சொல்லாமல் ஜனாதிபதி சொல்லியுள்ளார் என்றே கொள்ளவேண்டியுள்ளது.

எனவே தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதக்காக வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் பொதுசனவாக்கெடுப்பு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை தமது மேற்பார்வையில் நியாயத்தன்மையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எமது மக்களின் கோரிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் இது வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பொறுப்புக்கூல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மறுத்தல் என்பது ஒரே நாட்டுக்குள் தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்குப்பிராந்தியத்தில் வாழ முடியாது என்ற சூழ்நிலையை ஜனாதிபதியின் உரை உருவாக்கி இருக்கின்றது.

சர்வதேச தலையீட்டின் மூலமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறல் நீதியும் கிட்டும் என நாம் எண்ணவேண்டியுள்ளது.

கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் ஜனாதிபதி மூச்சுக் கூடவிடவில்லை

ஜனாதிபதி தமது உரையில் புத்த பகவானின் போதனை ஒன்றைச் சுட்டிக் காட்டி ஒருவரின் உடலில் ஒரு முள் பாய்த்திருப்பின் அதனால் ஏற்படும் வேதனையைப் போலவே அந்த முள் பாய்ந்ததனால் வேதனை ஏற்பட்டது என்ற சிந்தனையையும் ஞாபகமும் கூட வேதனையை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் அவய இழப்புக்கள் உறவுகளை இழந்தமை சொத்துக்களை இழந்தமை பற்றி வேதனையடைந்தது மட்டுமல்லாமல் சிந்தனையும் ஞாபகமும் கூட வேதனையைத் தரும் என எமது மக்களின் வேதனையை ஐக்கிய நாடுகள் சபையில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!