இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 29 ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுனாமி தாக்குதலில் பாதிக்னப்பட்ட பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 34 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 86 மாணவர்களை காணவில்லை. 52 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் கடுமையான தாக்குதலால் பலு நகரில் உள்ள பெரிய பாலம் இடிந்தது. வைத்தியசாலைகள் சேதம் அடைந்தன. இதனால் காயம் அடைந்த மக்களுக்கு திறந்த வெளியிலும், ராணுவ முகாம்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ராணுவ விமானம் மூலம் பலுவில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள், ஹொட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டு மீட்பு பணி நிறைவுறும் போது பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!