அமெரிக்காவை மிரட்டும் 13-வது புயல்- மக்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்காவை அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ள நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடர்ந்து புயல் தாக்கி வருகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ளன.

இந்த நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. மைக்கேல் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருகிறது.

மைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் கரோலினா புயல் கியூபாவை தாக்கி விட்டு அமெரிக்காவுக்குள் புகுந்தது. வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினாவை துவம்சம் செய்தது.

2 முதல் 7 செ.மீட்டர் வரை மழை பெய்தது. தற்போது உருவாகியுள்ள மைக்கேல் புயல் காரணமாக மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. பலத்த மழை கொட்டுகிறது. 28 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள 26 கவுண்டி பகுதிகளுக்கும் அம்மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் அவசர நிலை அறிவித்துள்ளார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

இது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டல்லாகாசே நகரில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுக்க 2 தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!