தனது கொள்கையுடன் ஒத்துப்போனால் தமிழ் அரசுக் கட்சியும் கூடத் தனது கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்து 24 மணி நேரத்திற்குள் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப் பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடதிறப்புவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தரப்புகளுக்குள் பிளவுகள் ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் முரண்படுவதால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. ஆனால் தமிழ் இனம் தான் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ளப் போகின்றது. தந்தை செல்வா ஜி.ஜி.பொன்னம்பலத்தைவிட்டுப் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார். கட்சியைச் சிறந்ததோர் நிலைக்குக் கொண்டு வந்த பின்னரும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீடு சென்று ஒற்றுமையை வலியுறுத்தியிருந்தார்.
நாம் வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் உள்ளோம்.எமது இனத்துக்கான தீர்வு முயற்சியில் எமது தலைமைகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாம் பிளவுகளை ஏற்படுத்துவது பொருத்தமல்ல. நாம் இவ்வாறு பிரிந்து செல்வோமாயின் கிழக்கு மாகாணத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே வடக்கு மாகாணத்துக்கு ஏற்படும். முதல்வர் இதனை உணர்ந்து ஒற்றுமையை சிதைக்காது ஒருமித்து செயற்படவேண்டும் எனக் கோரினார்.
தனது உரையில் அதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், தமது கொள்கையுடன் ஒத்துப்போனால் தமிழ் அரசுக் கட்சியும் கூடத் தனது கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!