ஐ. தே. கட்சியின் புனரமைப்பு ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள் ளது’’ எனத் தெரிவிக்கின்றன அச்சு ஊடகங்கள். ‘‘சுதந்திரக் கட்சி, இந்தக் கூட்டு அரசில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அது குறித்த இறுதி முடிவு மேற்கொள்ள கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் கூடவுள்ளது.’’ என்பது ஒரு சில பத்திரிகைகளது தலைப்புச் செய்தி. இவற்றைவிட, ‘ சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பர்.’ என்ற தலைப்புச் செய்தியும் சில பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.
இவையெல்லாவற்றையும் விட சமூக வலைத்தளங்களில், ‘‘ இணங்கிக் கொள்ளப்பட்ட விதத்தில் ஐ. தே. கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படாது விடின், தலைமை அமைச்சருக்கு எதிராக ஐ. தே. கட்சியாலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படத்தக்க ஆபத்து நிலவுகிறது ’’ என்ற செய்தி பகிரப்பட்டு வந்ததையும் அவதானிக்க முடிந்தது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்பார்ப்பைநிறைவேற்றியதா?
மேற்கண்ட செய்தித் தலையங்கங்கள் சகலவற்றிலிருந்தும் எம்மால் எதனைக் கிரகிக்க முடிகிறது? மகிந்தவின் தலைமையிலான கூட்டு எதிரணி, நாடாளுமன்றுக்குள் பற்ற வைத்த ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற குண்டால், அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை ஏற்படுத்த முடிந்ததா? அல்லாது விடில் அதனால் எத்தகைய பலாபலன் கிட்டியது என்பதையே அவை வௌிப்படுத்தி நிற்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், தமது எதிர்த்தரப்பினரை மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படவைத்து, மகிந்தவின் ‘ தாமரைமொட்டு ’ பெரு வெற்றியை ஈட்டிக் கொண்டது. தொகுதி ரீதியில் 70 வீதத்துக்கும் அதிகமான வெற்றியை மகிந்த அலையின் எழுச்சியை உறுதிப்படுத்தி தாமரை மொட்டுத் தரப்பு கைப்பற்றிக் கொண்டது.
அது அந்தத் தரப்பின் பரப்புரைக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட, மகிந்த என்ற அரசியல் பாத்திரத்தை சுற்றிச் சூழ்ந்து கைகோர்த்துச் செயற்பட்ட பொதுமக்கள் ஆதரவின் பலாபலன் எனக் கொள்வதே பொருத்தம்.
உண்மையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியான பின்னர், ஐ. தே. கட்சிக்கு இப்போதைய தலைவருக்குப் பதிலாக வேறு தலைவரொருவரே தேவைப்பட்டார்.
அரச தலைவர் மைத்திரியின் தரப்பிலிருந்து சுதந்திரக் கட்சி அமைச்சர்களில் பலர் தாம் அரசினின்றும் வெளியேறிவிட்டால் தமது அரசியல் எதிர்காலம் நிச்சய மற்றதாக ஆகிவிடுமென்பதை உணர்ந்து கொண்டனர். மகிந்த தரப்பின் 45 வீத வாக்குகளையும், மைத்திரி தரப்பின் 13வீத வாக்குகளையும் ஒன்று சேர்த்தால் சிறு தேசியக் கட்சிகளது அழுத்தங்கள் எதுவுமின்றி அதிகாரத்தைக் கைப்பற்ற இயலும் என்பதை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியபோது சம்பந்தன் தரப்பு மட்டுமன்றி, ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் தரப்புக்களும் குழம்பிப்போயின.
உள்ளூராட்சி முடிவுகளால் பெரும்பாலானோர் ஏமாற்றம்
உள்ளூராட்சித் தேர்தலில் தமது கட்சிக்கு பத்து வீதம் வரையான வாக்குகள் கிட்டுமென்ற எதிர்பார்ப்பில் ‘கிராமப்புற ஆதரவு ஜே. வி.பிக்கே’ எனக் கூறிவந்த அனுர திஸநாயக்க, வெறும் 6வீத வாக்குகளே கிட்டியமை கண்டு அரசியல் காற்று திசைமாறி வீசியிருப்பதை உணர்ந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முன்னைய தடவைகளைவிட இம்முறை குறைந்த வீத வாக்குகளே கிட்டியிருந்தன.
மகிந்தவின் தரப்புத் தவிர்ந்த ஏனைய அரசியல் தரப்புக்களுக்கும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பாரதூரமான காயங்களோ, சிறு காயங்களோ ஏற்படுத்தின என்பதே யதார்த்தம்.
மத்திய அரசுக்கு எந்த விதத்தி லும் அழுத்தம் ஏற்படுத்த இயலாத உள்ளூராட்சித் தேர்தலில் இத்தகைய பெரும் வெற்றியை பதிவு செய்த மகிந்த, ஏனைய தரப்புக்களது அத்தகைய பின்னடைவை நாடாளுமன்றத்துள் வெளிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார். அதன் பலாபலனே தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை.
கூட்டு எதிரணித் தரப்பினைச் சேர்ந்த சிலர் மத்தியில், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா என்பது தொடர்பில் நம்பிக்கையிருக்கவில்லை. ரணில் தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியில் தொடர்வது எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமக்கு இலாபகரமாக அமையும் என்பது அந்தக் குழுவினரது நம்பிக்கையாகும்.
ரணிலை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து அகற்றினால், எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் ரணிலைத் தோற்கடிப்பது சிரமமானதாக ஆகிவிடும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.
ரணில் அவரது தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்டால், ஐ.தே. கட்சிக்கான மக்கள் அனுதாபம் உயர்வடையுமா? என்பதற்கு இன்றைய அரசியல் போக்குக் குறித்த தெளிவான பார்வையில்லாதவர்கள் ‘ஆம்’ என்றே பதில் அளிப்பர். ஆனால் உண்மையில் ரணில் தமது பதவியை இழக்க நேர்ந்தால், ஐ. தே. கட்சி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான போட்டி உச்சமடையும்.
ரவிகருணா நாயக, சஜித் பிரேமதாச, நவீன் திஸநாயக ஆகியோர் ஐ.தே. கட்சியின் தலைமைத்துவத்துக்காக வெவ்வேறு தரப்புக்களாகப் பிரிந்து தம்மிடையே மோதிக் கொள்வர். இதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. அத்தகைய உட்கட்சிப் பூசலொன்றை உருவாக்கவே மகிந்த, ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் இணைக்க முடிந்தமை மகிந்தவின் வெற்றியே
தற்போது ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு சில நாள்கள் கடந்து விட்டுள்ளன. 54 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் இயங்கி வந்த கூட்டு எதிரணித்தரப்பில் மேலும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரை இணைத்துக்கொள்ள முடிந்தமை மகிந்த, ரணிலுக்கு எதிரான தமது நம்பிக்கையில்லாத் தீர்மானத் திட்டத் தின் மூலம் ஈட்டிக் கொண்ட முத லாவது வெற்றியாகும்.
அது 16 பேரை உள்ளீர்த்துக் கொண்டதுடன் முடிவுக்கு வரப்போகும் ஒன்றல்ல. தற்போது கூட்டு அரசினின்றும் சுதந்திரக் கட்சி வெளியேறுவது தொடர்பான பேச்சுக்கள் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அத்துடன் அமைச்சர்களில் ஒரு தரப்பினர் அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டுள்ளனர்.
ரணிலுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கூட்டு அரசு குலையுமானால், அது மகிந்த தரப்புக்கு பெறுமதியானதொரு வெற்றியல்லவா? அவ்விதம் ஆகுமானால், அதையடுத்து நிறுவப்படும் ஐ. தே. கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த அரசில் 30க்கும் குறைவான அமைச்சர்களையே நியமிக்க இயலும். அத்தகைய நிலையில் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருந்து.
அவை கிட்டாததால் விரக்தியு றும் ஐ.தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர், அதிருப்தி நிலை அடையக் கூடும். அதே சமயம், த. தே. கூட்டமைப்பு கோரிவரும் உள்ளக சுயநிர்ணய நிர்வா கத்தை உள்ளடக்கிய அரசமைப்புத் திருத்தத்தை சமர்ப்பித்து நிறைவேற்ற ஐ.தே. கட்சி அரசால் இயலாது போய்விடும்.
அதேவேளை மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவின் தூதரக வட்டாரங்கள் எவ்வாறாயினும் தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந் தும் செயற்பட வைக்குமாறு அரச தலைவர் மைத்திரிக்கும், தலைமை அமைச்சர் ரணிலுக்கும் அழுத்தம் கொடுத்து வரு வது தத்தமது நாடுகளது பூகோள அரசியல் நலன் சார் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலேயே ஆகும்.
சுதந்திரக் கட்சித் தரப்பினர் பொதுமக்கள் முன்னணியுடன்
இணைவதன் மூலம் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன்
செயற்பட முடியும்
சுதந்திரக் கட்சி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகச் செயற்பட வேண்டுமானால், அரச தலைவர் அரசில் தனித்துப் போக நேர்ந்து விடும். ஆனால், அவர் அனாதரவானவராக, தலைமை அமைச்சருக்கு அடங்கி நடக்கும் அரச தலைவர் பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, தற்போது தலைமை அமைச்சருடன் தாம் நடத்தி வரும் அரசின் பனிப்போரைத் தீவிரப்படுத்து வார் என்றே கருத வேண்டியுள்ளது.
சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகச் செயற்படுவதென்பதன் அர்த்தம், அது மகிந்தவின் தலைமையிலான பொது மக்கள் முன்னணியுடன் அரசியல் ரீதியில் இணைந்து கொள்வதாகும். அது உடனடியாக இடம் பெறாது விட்டாலும், காலப் போக்கில் அவ்விதம் நடந்தேயாகும்.
மைத்திரிபால தரப்பின் 13வீதம் மற்றும் மகிந்த தரப்பின் 45 வீதம் என்பவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் சிறு இனவாதக் கட்சிகளது நியாயமற்ற அழுத்தங்களுக்கு உட்படாமல், புதிய அரசொன்றை மேற்குறித்த தரப்பால் உருவாக்க வாய்ப்பமையும்.
அதே சமயம் மகிந்தவின் ‘தாமரை மொட்டு’ தரப்பினரில் ஒரு சிலர், இத்தகைய இணைவை விரும்புவதாகத்தோன்றவில்லை. சிறு இனவாத அரசியல் கட்சிகளது நியாயமற்ற அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்துச் செயற்படும் ஒரு அரச நிர்வாகமே அவர்களது எதிர்பார்ப்பாகும். இலங்கையின் அரசியலை ஆட்டம் காணவைத்து, நலிவுபடவைக்க இலக்கு வைத்துள்ள வெளிநாடுகளது தூதரங்களது விருப்பமும் அதுவே.
பெப்ரவரி 10ஆம் நாளின் மக்கள் எழுச்சியின் பலாபலனாக தலைமை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் மகிந்த தரப்பின் முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதில் மகிந்த தோல்வியுற்ற போதிலும், அரசியல் ரீதியில் அது அவருக்கு வெற்றியே. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் காரணமாகவே சுதந்திரக்கட்சி யிலிருந்து 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமது தரப்புக்கு மகிந்தவால் இழுத்துக்கொள்ள முடிந்தது.
தற்போது மகிந்தவின் இந்தக் கூட்டு எதிரணி மேலும் ஒருபடி முன்னேறி சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது தரப்புக்கு இழுத்துக் கொள்ளும் முயற்சி யில் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய தமது முக்கிய முயற்சியாகக் கொண்டு மகிந்த தரப்பு செயற்பட வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!